சீன ஹேக்கர்கள் கைங்கர்யம்; முடங்கியது ஐபேக் அமைப்பின் இணையதளம்
பெய்ஜிங்கிற்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்க தங்கள் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், சீனா மீதான நாடாளுமன்ற கூட்டணி (ஐபேக்) எனும் எம்.பி.க்களின் உலகளாவிய கூட்டணி ஒரு பெரிய இணைய தாக்குதலை சந்தித்துள்ளது.
ஐபேக் வலைத்தளம் கடந்த திங்களன்று, டி.டி.ஓ.எஸ் தாக்குதலுக்கு ஆளான பின்னர் சேவை முற்றிலும் தடைபட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலுக்கு பதிலளித்த ஐபேக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லூக் டி புல்போர்ட், “சீனாவால் இணையதளத்தை மட்டுமே தங்கள் ஹேக்கர்கள் மூலம் தடை செய்ய முடியும்.
ஆனால் ஐபேக் உறுப்பினர்கள் உய்குர்கள் மற்றும் ஹாங்காங்கர்களுக்கு ஆதரவாக எழுந்து நிற்பதை எதுவும் தடுக்க முடியாது என கூறினார்.
அத்துடன் டிடிஓஎஸ் தாக்குதல்களை நடத்துவதற்கான எந்திரம் சீன அரசிடம் இருந்ததாக சைபர் பாதுகாப்பு நிபுணர் ராபர்ட் பிரிட்சார்ட் கூறினார்.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சைபர் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
ஐபேக் எனும் சர்வதேச நாடுகளின் எம்பிக்களின் கூட்டணி 2020’இல் அமைக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள 20 பாராளுமன்றங்களில் இருந்து சுமார் 200 எம்.பி.க்கள் உள்ளனர்.
இதேவேளை சீன அரசு ஊடகங்கள் முன்னர் ஐபேக் அமைப்பை தொல்லை தரும் கூட்டணி என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.