இரு நாடுகளுக்கிடையே ஆரோக்கியமான நடவடிக்கைகளை கண்டு மகிழ்ச்சியில் சீனா!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆரோக்கியமான நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் பிற செக்டர்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க ஒப்புக்கொள்வதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் பிப்ரவரி 25-ம் தேதி அறிவித்தன.
இதனால் எல்லைப் பகுதியில் தற்போது பதற்றம் குறைந்துள்ளது. சில வாரங்கள் கழித்து, பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா இருவரும் இந்தியாவை நோக்கி சமாதான அழைப்புகளை விடுத்தனர்.
இரு அண்டை நாடுகளும் கடந்த காலத்தை புதைத்து முன்னேற வேண்டிய நேரம் இது என்று பாகிஸ்தான் ராணுவத் தலைவர் கூறி இருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆரோக்கியமான நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், “இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நேர்மறையான தொடர்புகள் மற்றும் நடவடிக்கைகளால், மகிழ்ச்சியடைந்துள்ளோம்.
பழையவற்றை மறந்து வளர்ச்சியை நோக்கிச் செல்லவேண்டும். பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றி பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியை நிலைநாட்ட தயாராக உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.