இளவரசர் பிலிப்பின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள ஹரி
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்த நிலையில் இளவரசர் ஹரி தனது தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து நேற்று லண்டனுக்கு சென்றுள்ளார்.
இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகிய பின்னரான இங்கிலாந்துக்கான அவரது முதலாவது விஜயம் இதுவாகும்.
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து இளவரசர் ஹரி, மேகன் மார்கல் தம்பதி விலகினார்கள். இவர் லண்டனுக்கு வருகை தரும்போது மனைவி மேகன் மார்க்கலை அழைத்து வரவில்லை. காரணம் அவர் கர்ப்பிணியாக இருப்பதால் மருத்துவர்கள் பயணங்களை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கியதால் இளவரசர் ஹரி மட்டும் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
ஹரி அரசாங்கத்தின் டெஸ்ட் டு ரிலீஸ் திட்டத்தின் கீழ் எதிர்மறையான கொரோனா வைரஸ் பரிசோதனையை வழங்கினால், 10 க்கு பதிலாக ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படலாம். எனினும், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் 'இரக்கமுள்ள அடிப்படையில்' தனிமைப்படுத்தப்படலாம் என்று உத்தியோகபூர்வ வழிகாட்டுதல்கள் கூறுவதால், அவர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்.
இந்நிலையில், மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பான நிகழ்வுகளுக்கான அறிவிப்பை அவரது மனைவியும் இங்கிலாந்து ராணியுமான இரண்டாம் எலிசபெத் வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 17 ஆம் திகதி மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெறும். இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்படும். அத்துடன் 17 ஆம் திகதி மாலை 03.00 மணிக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 30 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காலம் என்பதால் வெகுவிமர்சையாக ஊர்வலம் மற்றும் அரசு மரியாதை எதுவும் முன்னெடுக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி மாலை வின்ட்சர் கோட்டையில் இருந்து உரிய மரியாதையுடன் இளவரசர் பிலிப்பின் உடல் அருகாமையில் உள்ள செயிண்ட் ஜோர்ஜ் சேப்பலுக்கு எடுத்துச்செல்லப்படும். இறுதிச்சடங்கில் இராணுவத்தினரே பங்கேற்பார்கள் என்பதுடன் , குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இளவரசரின் தனிப்பட்ட அதிகாரிகளும் பங்கேற்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலம் சரியாக 03.00 மணிக்கு செயிண்ட் ஜோர்ஜ் சேப்பலுக்கு சென்றடையும், அதன் பின்னர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்படும். இறுதி ஊர்வலம் முடியும் வரையில் தேவாலய மணிகள் ஒலிக்கும். அத்துடன் துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை செலுத்தப்படும்.
மேலும் இறுதிச்சடங்குகளில் பங்கேற்கும் நபர்களின் பட்டியல் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.