கொளுத்திய வெயில்... ஆம்புலன்ஸ் சேவைக்காக காத்திருந்ததால் பறிபோன உயிர்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்ப அலை உச்சம் பெற்றிருந்த நாளில் ஆம்புலன்ஸ் சேவைக்காக காத்திருந்து தந்தையை இழக்க நேர்ந்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 27ம் திகதி, வெப்ப அலை உச்சம் பெற்றிருந்த நிலையில், கடுமையாக அவதிப்பட்டுள்ளார் 71 வயதான கியான் கோயல். இதனையடுத்து அவரது மனைவி 911 இலக்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் சுமார் 90 நிமிடங்கள் தாமதமாகவே அவசர மருத்துவ உதவிக்குழுவினர் வந்து சேர்ந்ததாக கியான் கோயலின் மகள் சவிதா அஹுஜா தெரிவித்துள்ளார்.
மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்ட தமது தந்தை, சம்பவத்தன்று அதிக வெப்பம் காரணமாக வலிப்பு நோய்க்கு உள்ளானார் என சவிதா குறிப்பிட்டுள்ளார்.
லாங்லி நினைவு மருத்துவமனையில் இருந்து சுமார் 10 நிமிட பயணத் தொலைவில் அந்த குடும்பம் வசித்து வந்துள்ளது. ஆனால், சொந்த வாகனத்தில், இக்கட்டான நிலையில் இருக்கும் நபரை கொண்டு செல்ல சவிதாவின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆம்புலன்ஸ் சேவை வந்து சேர தாமதமாகவே, குடும்பத்தில் அனைவருக்கும் பயம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கியான் கோயல் இறக்கவே, தம்மால் தான் இந்த நிலை என சவிதாவின் தாயார் கதறியுள்ளார்.
இந்தியாவில் அல்ல, கனடாவில் வசிக்கும் நமக்கு இப்படி ஒரு நிலை எதிர்பார்க்கலாமா என்றும் அவர் கண் கலங்கியுள்ளார்.