கனேடிய மாகாணம் ஒன்றில் 312 பேர்கள் நிலை கவலைக்கிடம்
கொரோனா பெருந்தொற்றின் நான்காவது அலை தொடர்பில் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆல்பர்ட்டா மாகாணத்தில் அவசர சிகிச்சையில் பலர் அனுமதிக்கப்பட்டு வருவது கவலையளிப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போதுவரையில் 312 பேர்கள் கொரோனா பாதிப்பால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை வரையில் வெளியான தரவுகளின் அடிப்படையில், இதில் 265 பேர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் எனவும், எஞ்சியவர்கள் பல்வேறு நோய்களால் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெறுபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர சிகிசை பிரிவுக்கான கூடுதல் படுக்கை வசதிகளை ஆல்பர்ட்டா சுகாதாரத்துறை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்தை பொறுத்தமட்டில், மொத்தம் 370 அவசர சிகிச்சை படுக்கைகளே உள்ளன.
கால்கரி மண்டலத்தில் 133 அவசர சிகிச்சை பிரிவு படுக்கை வசதியில் 87 சதவீதமும் நிரம்பியுள்ளதாக ஆல்பர்ட்டா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதே நிலையே 158 அவசர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகள் கொண்ட எட்மண்டன் மண்டலத்திலும் என கூறப்படுகிறது.
திங்கட்கிழமை வரையான தரவுகளின் அடிப்படையில் ஆல்பர்ட்டா மாகாணத்தில் மொத்தம் 21,307 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 1,063 பேர்களி மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 265 பேர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.