ஒரே வாரத்தில் வெப்ப அலைக்கு பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை வெளியானது
பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் ஒரே வாரத்தில் 719 பேர்கள் வெப்ப அலைக்கு பலியாகியுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இது பொதுவாக கடந்த காலங்களை விட மூன்று மடங்கு அதிகம் என்பதையும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதன்மை உடற்கூராய்வாளர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பெரும்பாலான மக்கள் வெப்ப அலை காரணமாகவே இறந்துள்ளதாக உறுதி செய்துள்ளனர்.
இதனிடையே மாகாணத்தின் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. 24 மணி நேரமும் இயங்க வேண்டியவர்கள், செயலில் இல்லை எனவும், பல மணி நேரம் ஆம்புலன்ஸ் சேவையை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி தீயணைப்பு வீரர்களின் உதவியை நாடி பலர் அவர்களின் அலுவலகங்களுக்கே செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கான முதன்மை அதிகாரி, மன்னிப்பு கோரியுள்ளார்.