அமெரிக்காவில் மிகப் பெரிய பனிமலையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்: 5 பேர் மரணம்!
அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய பனிமலை ஒன்றில் ஹெலிகாப்டர் விழந்து நொறுங்கியதில் 5 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிக் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய பனிமலை உள்ளது.
தினந்தோறும் ஏராளமான மலையேற்ற வீரர்கள் இந்த மலையில் ஏறுவது வழக்கம். அதே வேளையில் நடைபயணமாக மலை உச்சியை அடைவதற்கு பதிலாக சுற்றுலா பயணிகளை ஹெலிகாப்டரில் மலை உச்சிக்கு அழைத்துச் செல்வது பிரபலமான ஒன்றாகும்.
அந்த வகையில் 3 சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று நிக் பனி மலை உச்சிக்கு புறப்பட்டது. ஹெலிகாப்டரில் 3 சுற்றுலா பயணிகளுடன் 2 வழிகாட்டிகள் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 6 பேர் இருந்தனர்.
புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்துக்குப்பிறகு மலையின் நடுப்பகுதியை நெருங்கி இருந்த வேளையில் ஹெலிகாப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து விமானி உடனடியாக ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார்.
ஆனால் அவரது கட்டுக்குள் வராத ஹெலிகாப்டர் மலையின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாதநிலையில் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.