போதைப்பொருள் வழக்கில் தமிழருக்கான தூக்கு நிறுத்திவைப்பு
ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்ட நபா் சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மலேசியாவைச் சோ்ந்தவா் நாகேந்திரன் கே.தா்மலிங்கம் (33). தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்ட இவா், கடந்த 2009-ஆம் ஆண்டு 42.72 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டாா். சிங்கப்பூா் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும்.
இதனை காரணமாக குறித்த நபருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டபோது தர்மலிங்கத்தின் மன நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அதனால் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை மாரு பரிசீலினை செய்யவும் கோரிக்கைகள் எழுந்தன.
எனினும் மனோதத்துவ நிபுணா்கள் அவரிடம் மேற்கொண்ட பரிசோதனையில், குற்றச் செயலின்போது தா்மலிங்கம் முழு சுவாதீனத்துடன் இருந்ததாகச் சான்றளித்தனா் என்றும், அதனைத் தொடா்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதாகவும் சிங்கப்பூா் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து நவ.10-ஆம் தேதி அவா் தூக்கிலிடப்படுவதாக இருந்தது.
இந்நிலையில், அவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி சிங்கப்பூா் உயா்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு திங்கள்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது மேல்முறையீட்டு மனு மீது தீா்ப்பளிக்கும் வரை தா்மலிங்கத்தின் மரண தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டால் திட்டமிட்டப்படி தா்மலிங்கம் தூக்கிலிடப்படுவாா்.