வரலாறு காணாத பெருவெள்ளம்... மிதக்கும் கனேடிய மாகாணம்: திகைக்கவைக்கும் புள்ளிவிபரம்
தென்கிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதும் கடந்த சில நாட்களில் பெய்த கனமழையால் ஆறுகள் மற்றும் விளைநிலங்கள் மொத்தமாக மூழ்கியுள்ளன.
பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு, நாட்டின் எஞ்சிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
சுமார் 20,000 மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டுவிட்டு கட்டாயம் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான விலங்குகள் செத்துமடிந்துள்ளது. இருப்பினும், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் களமிறங்கி மீட்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஹோப் பகுதியில் மட்டும் 48 மணி நேரத்தில் 252 மில்லிமீற்றர் மழை பதிவானது. 125 ஆண்டுகளுக்கு பின்னர், Agassiz பகுதியில் மட்டும் 24 மணி நேரத்தில் 127 மில்லிமீற்றர் மழை பதிவானது.
பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 17,775 பேர்களை புதன்கிழமை மதிய நேரத்திற்கு முன்னர் மீட்புக்குழுவினர் மீட்டனர். Merritt பகுதியில் இருந்து மட்டும் திங்கட்கிழமை ஒரே நாளில் 7,000 பேர்கள் மீட்கப்பட்டனர்.
prairie பகுதியில் 300 பேர்கள் இன்னமும் சிக்கியுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதான சாலை 7ல் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியிருந்த 50 சிறார்கள் உட்பட 275 பேர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பெருவெள்ளம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதும் 54 இடங்களில் வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கான உத்தரவுகள் விடுக்கப்பட்டுள்ளது.