காட்டுத்தீக்கு பெற்றோர் பலியாவதை நேரில் கண்டேன்: அதிர்ச்சி சம்பவத்தை வெளியிட்ட நபர்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீக்கு பெற்றோரை பறிகொடுத்த நபர் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்ப அலை காரணமாக ஒரே வாரத்தில் 700 பேர்களுக்கு மேல் பலியாகியுள்ளனர். Lytton பகுதி மொத்தமாக சேதமடைந்துள்ளது.
இங்குள்ள பெரும்பாலான குடியிருப்புகள் நெருப்புக்கு இலக்கானதால் பயன்பாட்டிற்கு உதவாது என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், பொதுமக்களை வெளியேற்ற ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், Lytton பகுதியில் காட்டுத்தீக்கு தமது பெற்றோரை இழந்த நபர், அந்த கோர நிமிடங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
தங்களது குடியிருப்பு மொத்தமாக தீக்கிரையான நிலையில், பெற்றோர் அகழி ஒன்றில் தங்கியிருந்ததாக Jeff Chapman என்ற நபர் தெரிவித்துள்ளார்.
அப்போது திடீரென்று மின்சார கம்பிகள் அறுந்து அவர்கள் மீது விழுந்ததுடன், தமது கண் முன்னே அவர்கள் நெருப்பு கோளமானதாக குறிப்பிட்டுள்ளார்.
தம்மால் அவர்களை காப்பாற்ற முடியாமல் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது என Jeff Chapman கண்கலங்கியுள்ளார்.
கருகிய நிலையில் 60 வயது கடந்த தமது பெற்றோரை காண நேர்ந்தது தம்மை மொத்தமாக உலுக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், அதிகாரிகள் தரப்பு இதுவரை அந்த பகுதிக்கு செல்லவில்லை என்றே கூறப்படுகிறது.
புதன்கிழமை வரையில் சுமார் 1,000 பேர்களுக்கும் அதிகமானோர் Lytton சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த துயரங்களில் இருந்து மக்கள் மீண்டு வர வாரங்களும் ஆண்டுகளும் ஆகலாம் என முதன்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.