கனடாவில் நூற்றுக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு
வடமேற்கு ஒன்ராறியோவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கானோரை வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு ஒன்ராறியோவின் கெனோராவில் வரும் நாட்களில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கெனோரா நகர அதிகாரிகள் தரப்பு வெளியேறும் உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளனர்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் உள்ள சில சாலைகள் மூடப்பட்டதால் சனிக்கிழமை பகல் அதிகமான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அதிகாரிகள் தரப்பு பணித்துள்ளது.
சாலைகள் மூடப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சில தெருக்களில் 45 சென்டிமீட்டருக்கும் அதிகமான தண்ணீர் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்,
மட்டுமின்றி, இனி பாதுகாப்பான சாலைகளை அமைக்கவோ அல்லது புதிய மதகுகளை நிறுவவோ முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், வூட்ஸ் ஏரி, வின்னிபெக் ஆறு மற்றும் பிளாக் ஸ்டர்ஜன் ஏரி ஆகியவற்றின் நீர்மட்டம் அடுத்த ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பிளாக் ஸ்டர்ஜன் ஏரியின் நீர் இன்னும் வின்னிபெக் ஆற்றில் பாயும் நிலையில், ஆற்றின் நீர் மட்டம் மிக அதிகமாக உயர்ந்தால் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் கணிசமாக அதிகரிக்கும் என்றும் நகர நிர்வாகம் எச்சரிக்கிறது.