மெக்ஸிக்கோ வன்முறையில் சிக்கிய கனடியரின் திகில் அனுபவங்கள்
மெக்ஸிக்கோவின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான புயுட்ரா வலாட்ராவில் அமைதியான ஞாயிறு மாலை, திடீரென போர்க்களமாக மாறியது.
அந்த வன்முறையின் நடுவில் சிக்கிய கனடிய ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் யிவ்ஸ் பூட்டின் தனது திகில் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
கனடா – அமெரிக்கா ஹாக்கி போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த பூட்டின், திடீரென நகரின் ஒரு பகுதியில் புகை மேகங்கள் எழுவது கவனித்தார். போட்டியின் உச்சக்கட்ட தருணத்தையும் விட்டு, நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்குச் சென்றதாக அவர் கூறினார்.

அங்கு சென்றபோது பல வாகனங்கள் எரிந்துகொண்டிருப்பதை கண்ட அவர், தனது செல்பேசியில் காட்சிகளை பதிவு செய்தார்.
ஆனால், அதே நேரத்தில் மெக்ஸிக்கோ இராணுவம் முக்கிய போதைப்பொருள் கும்பல் தலைவரான Nemesio Ruben Oseguera Cervantes, “எல் மேன்சோ” (El Mencho) என அழைக்கப்பட்டவரை கொன்றது அவருக்குத் தெரியாது.
அந்த நடவடிக்கைக்கு பிந்தைய பதற்றத்தில், நகரின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. “அது ஒரு போர்ப் பகுதி போல இருந்தது,” என அவர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
சில நிமிடங்களில், கும்பல் உறுப்பினர்கள் என அவர் நம்பிய சிலர் அவரை துரத்தத் தொடங்கினர்.
சுமார் ஒரு கிலோமீட்டர் துரத்தப்பட்ட அவர், பின்னர் பிடிபட்டு தாக்கப்பட்டதாக கூறினார். “அவர் என்னைப் பிடித்து முகத்தில் அடித்தார். தரையில் தள்ளி மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டனர்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
தாக்குதலுக்குப் பின்னர், அவரது மோட்டார் சைக்கிளையும் நடுவீதியில் தீ வைத்து எரித்தனர். அருகிலிருந்த ஒரு குடும்பம் அவரை தங்கள் வீட்டில் புகலிடம் அளித்து பாதுகாத்தது.
அந்நகரில் ‘வீட்டுக்குள் தங்கும்’ உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், அவர் அங்கு ஒரு இரவு தங்கினார். “நான் முழு இரவும் தூங்கவில்லை. நடந்ததை நினைத்துக்கொண்டே இருந்தேன்,” என தெரிவித்துள்ளார்.
செய்திகளைத் தேடி ஓடிய அனுபவம் இருந்தாலும், இந்த முறை செய்தியின் நடுவே சிக்கிக் கொள்வேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என கூறினார்.
அவர் மேலும், “மெக்ஸிக்கோ மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட கும்பல் மட்டுமே ஆபத்தானது,” என்றும் வலியுறுத்தினார்.