ரஞ்சித்தை பாராட்டமாட்டேன்; ஆனால் இதை செய்வேன்; நாசர்
நடிகர் நாசர் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ரஞ்சித்தை பாராட்டியுள்ளார். ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரைக்காக ரஞ்சித்தை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.
படம் வெளியானது முதல் அதில் பங்காற்றியவர்கள் வாழ்த்து மழையில் நனைகிறார்கள். இந்நிலையில் நாசரும் தனது நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்திருக்கும் செய்தியில், "தம்பி ரஞ்சித், உன்னை நான் பாராட்ட மாட்டேன். உங்கையைப் புடிச்சி ஒரு நூறு முத்தங் கொடுத்து, 'நன்றி'ன்னு ஒரு வார்த்த மனசார சொல்லுவேன். இப்படி ஒரு படம் எம் சமூகத்துக்கு கொடுத்ததுக்கு.." என குறிப்பிட்டுள்ளார்.
சார்பட்டா பரம்பரையில் எண்பதுகளின் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களையும், அவர்கள் வாழ்க்கையையும், அதனூடாக அந்தக்காலகட்ட அரசியலையும் ரஞ்சித் காட்சிப்படுத்தியிருந்தார்.
அபூர்வமாகவே திரைப்படங்களில் இப்படியான அரசியல் வராலாறுகள் பதிவு செய்யப்படுவதால் ரசிகர்கள், விமர்சகர்கள் அரசியல்வாதிகள் திரையுலகினர் என சகலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.