பிரித்தானிய அரசு இன்று மாலை வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு!
பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவரும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு விடுமுறைக்கு பயணிப்பதற்கான நாடுகளின் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
பிரித்தானியாவில், வரும் மே 17-ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில், பிரித்தானியாவின் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் (Grant Shapps) இன்று மாலை 5 மணிக்கு Downing Street பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்பில், பிரித்தானிய மக்கள் எந்தெந்த நாடுகளுக்கு விடுமுறைக் கொண்டாட்டங்களுக்காக பயணம் செய்யலாம் என்ற 'பட்டியல்' வெளியிடப்படவுள்ளது. அரசாங்கம் இந்த பட்டியலை அறிவிப்பதன் மூலம், அந்த குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் பிரித்தானியர்கள் எந்தவித தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுற்றுலா சென்று வரலாம் என கூறப்படுகின்றது.
பட்டியலில் உள்ள நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள், திரும்பி வரும்போது தனிமைப்படுத்தத் தேவையில்லை, வருகைக்குப் பிந்தைய ஒரு கொரோனா சோதனை மட்டும் எடுக்க வேண்டும். ஆனால், மஞ்சள் பட்டியல் நாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் குறைந்தது ஐந்து நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தி, 2 கொரோனா சோதனைகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சென்றவர்கள், தலா 1,750 பவுண்ட் சொந்த செலவில் அரசு அங்கீகரித்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் 11 நாட்கள் தங்க வேண்டும். இதற்கிடையில் 2 கொரோனா சோதனைகளை எடுக்க வேண்டும். இதேவேளை போர்ச்சுகல், ஐஸ்லாந்து மற்றும் மால்டா ஆகியவை பட்டியலில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிப்ரால்டர் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளும் அந்த பட்டியலில் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் கிரீஸ் போன்ற மிகவும் பிரபலமான ஐரோப்பிய நாடுகள் ஆரம்பத்தில் மஞ்சள் பட்டியலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் கோடை விடுமுறை மாதங்களுக்கு முன்னதாக அவை பச்சை நிறத்திற்கு மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனபடி , பிரித்தானியாவில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அனைத்து விபரங்களும் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.