திடீரென அதிகரிக்கும் தொற்று: முடக்கப்படும் நிலையில் பருத்தித்துறை நகர்!
பருத்தித்துறை நகர் பகுதி மறு அறிவித்தல் வரையும் மூடப்படுவதாக சுகாதாரத் தரப்பினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் J/401 கிராம அலுவலர் பிரிவு முற்றாக முடக்கப்படுகின்றது. இதனால் பருத்தித்துறை நகர் பகுதி வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்படும்.
வர்த்தக நிலையங்களை மூடுமாறும் மறு அறிவித்தல் வரையில் வெளியேறவோ உள் நுழையவோ வேண்டாம் என்றும் சுகாதாரத் தரப்பினர் அறிவித்துவருகின்றனர் என்றும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதனால் மெத்தக்கடைச் சந்தி, ஓடக்கரை வீதி, சுப்பர்மடம் கடற்கரை வீதி உட்பட்ட பகுதிகளில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு நாளை முடக்கப்படும் என்று தெரியவருகிறது.
கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து அதிகளவானோர் சட்டவிரோதமாக வெளியேறியமை உறுதி செய்யப்பட்டதை அடுத்தும், நகரப்பகுதி வியாபாரிகள் சிலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதனாலும், தொற்றாளர்கள் குறித்த பகுதியில் அதிகளவில் நடமாடியதனாலும் அப்பகுதி அதிக கொரோனா தொற்று அபாயம் மிக்க பகுதியாக அடையாளம் காணப்பட்டதால்மறு அறிவித்தல் வரும் வரை முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இன்றும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 40 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.