கனடாவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்திய இளம்பெண்ணின் புகைப்படம் வெளியானது
கனடாவில், இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவரை சக இந்தியர் ஒருவர் கொலை செய்த வழக்கில் அந்த இளம்பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, அதாவது, அக்டோபர் மாதம் 21ஆம் திகதி, காலை 11.00 மணியளவில், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நார்த் யார்க்கில் வசித்துவந்த அமன்பிரீத் சைனி (27) என்னும் இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் உயிரற்ற உடல், Charles Daley Park என்னும் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டது.

உடல் முழுவதும் பயங்கர காயங்களுடன் சைனியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பிராம்டனைச் சேர்ந்த இந்திய இளைஞரான மன்பிரீத் சிங் (27) என்பவர் சைனியைக் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
மன்பிரீத் சிங் மீது கனடா முழுமைக்குமான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்பிரீத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், அவரைக் கண்டால், அவரது அருகில் நெருங்கவேண்டாம் என்றும் உடனடியாக அவசர உதவியை அழைக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், மன்பிரீத் சிங் கனடாவிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தற்போது பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, மன்பிரீத்தைப் பிடிக்க உதவுமாறு இந்திய பொலிசாரை கனேடிய பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.