அமெரிக்க ஜனாதிபதி மாளிகை இயக்குனராக பொறுப்பேற்கும் இந்தியர்
அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குனராக, இந்தியாவில் பிறந்த கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்றவர் கவுதம் ராகவன். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அரசியல் ஆலோசகராகவும், ஜனாதிபதியின் அலுவலக உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.
ஜனாதிபதி அலுவலக இயக்குனராக இருந்த Cathy Russell என்பவரை, 'யூனிசெப்' அமைப்பின் செயல் இயக்குனராக நியமிக்க ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் விருப்பம் தெரிவித்திருந்தார்.
அதை ஜனாதிபதி ஜோ பைடன் ஏற்றுக் கொண்டார். இதைஅடுத்து ஜனாதிபதி அலுவலக இயக்குனராக, கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றுவதற்கு தகுதியுள்ளோரை தெரிவு செய்யும் பொறுப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளரான இவர் தமது துணைவர் மற்றும் இவர்களின் மகளுடன் தலைநகர் வாஷிங்டனில் வசித்துவருகிறார். முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகத்திலும், முக்கிய பொறுப்புகளை கவுதம் ராகவன் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.