கனடாவில் இந்தியரை கத்தியால் குத்திய மர்ம நபர்
கனடாவில் வாழும் தன் மகளைக் காண்பதற்காக சென்ற இந்தியர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள கெலோனாவில் வாழ்ந்துவரும் தன் மகளான மன்வீர் சந்துவைக் காண்பதற்காக கனடா சென்றுள்ளார் இந்தியரான தேஜிந்தர் சிங் (57).

கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த சிங்கை அணுகியுள்ளார் மர்ம நபர் ஒருவர்.
அவர் சிங்கிடம் பேச்சுக் கொடுக்க முயல, தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூறிவிட்டு தொடர்ந்து நடக்க முயன்றுள்ளார் சிங்.
திடீரென முதுகில் பயங்கர வலி ஏற்பட, முதுகைத் தொட்டுப் பார்த்துள்ளார் சிங். அப்போதுதான் அவருக்குத் தெரிந்துள்ளது, தன்னை யாரோ கத்தியால் குத்தியுள்ளார்கள் என்பது.
உடனடியாக சிங் உதவி கோரி அழைக்க, அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார் சிங்.
தன்னைக் காண்பதற்காக ஆசையுடன் கனடா வந்த தன் தந்தை இப்படி ஒரு விரும்பத்தகாத விடயத்தை எதிர்கொண்டதால் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளார் சிங்கின் மகளான மன்வீர்.
நான் 10 ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவருகிறேன், ஆனால், இதுவரை இப்படி பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டதில்லை என்று கூறும் மன்வீர், பாவம் என் அப்பா, இந்த மோசமான விடயத்தை அவரால் மறக்கவே முடியாது என்கிறார்.
இதற்கிடையில், சிங்கை கத்தியால் குத்திய நபர் இதுவரை பொலிசில் சிக்கவில்லை. அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்கள் பொலிசார்.