கனடாவில் மாயமான இந்திய மாணவர் தொடர்பில் வெளியாகியுள்ள துயரச் செய்தி
கனடாவுக்கு கல்வி கற்பதற்காகச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாயமாகியுள்ள விடயத்தால் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலக்கமடைந்திருந்த நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஏப்ரல் மாதம், இந்தியாவின் ஹரியானாவிலிருந்து கனடாவுக்குக் கல்வி கற்பதற்காக சென்றார் சாஹில் குமார் (22).
மே மாதம் 16ஆம் திகதி, ஹாமில்ட்டனில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து, ரொரன்றோவில் தான் கல்வி கற்கும் Humber கல்லூரிக்குப் புறப்பட்டுள்ளார் குமார்.
1.00 மணியளவில், தனது கல்லுரி இருக்கும் இடத்துக்கு அருகே குமார் நடமாடும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. அதற்குப் பிறகு குமாரைக் காணவில்லை.
இந்நிலையில், ரொரன்றோவில் குமாருடைய உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அவரது மரணத்தின் பின்னணியில் குற்றச்செயல் எதுவும் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
மகன் கனடாவுக்குச் சென்றதையடுத்து அளவற்ற மகிழ்ச்சியடைந்திருந்த குமாரின் குடும்பத்தினர், மகனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் கவலையில் ஆழ்ந்திருந்தார்கள்.
மே மாதம் 27ஆம் திகதி, நீர் நிலை ஒன்றில் குமார் உயிரிழந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் கூற, குமார் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்கள்.
வீடியோ அழைப்பு மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.
அதற்குப்பின், கனேடிய பொலிசார் தங்களை அதிகம் தொடர்பு கொள்வதில்லை என்கிறார்கள் குமார் குடும்பத்தினர்.
பிள்ளைக்கு என்ன ஆனது என புரியாமல், சமீபத்தில் கனடாவில் காணாமல்போன இந்திய மாணவர்களின் குடும்பங்களை தொடர்புகொண்டு விசாரித்து வருகிறார்கள் அவர்கள்.
இதற்கிடையில், குமாருடைய உடல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பது போன்ற எந்த விவரங்களையும் வெளியிடாமல் வைத்துள்ளார்கள் கனேடிய பொலிசார்.