குடியுரிமைக்காக அமெரிக்க எல்லையில் குழந்தைகளை விட்டுச்செல்லும் இந்திய பெற்றோர்
அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்று நினைத்து, இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பெற்றோர், தங்களது பிள்ளைகளை, அமெரிக்க - மெக்ஸிகோ அல்லது அமெரிக்க - கனட எல்லைப் பகுதியில் விட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்க எல்லையில் அநாதைகளாக விடப்படும் பிள்ளைகள் அமெரிக்க அரசு அழைத்துச் சென்று அவர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கிவிடும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்துவிடுவதாகவும், ஆனால், அதுபோன்ற நிகழ்வுகளை டிரம்ப் அதிகாரத்தின் கீழ் இருக்கும் குடிரியுமைத் துறை கண்டுபிடித்துவிட்டதால், இனி அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.
அகதிகள் அங்கீகாரம்
கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 500 பிள்ளைகள், அமெரிக்க எல்லையில் ஆதரவின்றி விட்டுச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், இந்த விஷயத்தை டிரம்ப் நிர்வாகம் கடுமையான முறையில் தடுக்க திட்டமிட்டு வருகிறது.
இது அதிக நாள்கள் நீடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்று 12 - 17 வயதுடைய பிள்ளைகள் விடப்படுவதாகவும் சில வேளைகளில் 6 வயது பிள்ளைகள் கூட இங்கே விடப்படுவதாகவும், அவர்களுக்கு தங்களது பெற்றோரின் பெயர் உள்ளிட்ட சில விஷயங்கள் மட்டுமே தெரிந்திருக்கும் என்பதுதான் மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்கிறார்கள்.
அமெரிக்காவுக்குள் வந்த அகதிகள் என்ற அளவிலாவது இந்த பிள்ளைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதே இந்த பெற்றோரின் எண்ணமாக இருக்கும் என்றும், பிள்ளைகள் இங்கே ஆதரவற்று விடுவதற்கு முன்பே, இவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
சட்டவிரோத குடியேற்றத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்த ஒருவர், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய பெற்றோர்கள் அமெரிக்காவில் தங்குவதை சட்டப்பூர்வமாக்குவதற்கு, குழந்தைகளை இவ்வாறு எல்லையில் விடுவது, அவர்களுக்கு அகதி என்ற அங்கீகாரம் கிடைத்ததும், அவர்கள் மூலமாக பெற்றோரும் அங்கீகாரம் பெறுவதற்கு முயல்வதும் ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுகிறதாம்.