இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைய முயன்ற இந்தியர் சுட்டுக்கொலை
இஸ்ரேலிய எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாக கூறி இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜோர்டானிய வீரர்களால் இஸ்ரேல் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட இந்தியர் கேரள மாநிலத்தை சேர்ந்த கேப்ரியல் பெரேரா (வயது 47) என்பவர் ஆவார்.
ஜோர்டானிய பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக்கொலை
கேரளாவின் தும்பா மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியான தகவலை இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது.
இந்தியரின் உடலை மீட்டு, கேரளாவிற்கு கொண்டு வரும் பணியில் ஜோர்டானிய அதிகாரிகளுடன் தீவிரமாக பணியாற்றி வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரான பெரேரா, ஜோர்டானுக்கு விசிட்டர் விசாவில் சென்று அங்கிருந்து ஜோர்டான் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற போது , ஜோர்டானிய பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பெரேராவின் உறவினர் எடிசனும் அவருடன் சேர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைய முயன்றபோது துப்பாக்கிச்சூட்டில் படுகாயத்துடன் உயிர் தப்பி சிகிச்சைக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய பிறகு மேற்கு கரையில் வன்முறை சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டான் - இஸ்ரேல் எல்லை மிகவும் பதற்றமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.