தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினர் - கறுப்பின மக்களிடையே முறுகல்
தென்னாப்பிரிக்காவில், ஏற்கனவே வன்முறை அதிகரித்து வரும் நிலையில், தற்போது கருப்பின மக்களுக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் இடையில் பதற்றமான நிலை நிலவுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் வன்முறை வெடித்து வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரத்தில் இந்திய மக்கள் அதிகமாக வாழக்கூடிய ஃபீனிக்ஸ் புறநகர் பகுதி மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் கலவரங்கள் அதிகரித்து வருகிறது.
இதில் இந்திய வம்சாவளியினர் மற்றும் கருப்பின மக்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி இணையதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த மோதலை தவிர்க்க, நாட்டின் அதிபர் சிறில் ராமபோஸா, காவல் துறை அமைச்சர் மற்றும் க்வாஸூலு நடால் மாகாணத்தின் முதல்வர் பேகி சிலி என்பவரை நேற்று அங்கு அனுப்பியிருக்கிறார்.
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்காக, அவர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் அவர் ஆஜராகவில்லை. எனவே நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கடந்த மாதம் 29 ஆம் திகதியன்று அவருக்கு 15 மாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 7ஆம் திகதியன்று ஜேக்கப் ஜுமா காவல்துறையினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில் அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க கலவரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வன்முறையில் சிக்கி 110 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.