அமெரிக்க பொலிஸாரால் உயிரிழந்த இந்திய மாணவிக்கு 29 மில்லியன் இழப்பீடு
அமெரிக்க காவல்துறை அதிகாரியால் விபத்து ஏற்படுத்தி, உயிரிழந்த இந்திய மாணவி ஜான்வி கந்துல்லா ( Jaahnavi Kandula)குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிகாரிகள் 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர் .
2023ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ஜான்வி கந்துல்லா ( Jaahnavi Kandula) என்ற 23 வயது இந்தியா வம்சாவளி மாணவி , அமெரிக்காவின் சியாட்டிலில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அதிகாரிகள் கேலி செய்து உரையாடல்
அப்போது காவல் அதிகாரியான கெவின் டேவ் என்பவர் ஓட்டிச்சென்ற கார் பயங்கரமாக மோதியது. இதில் 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி கந்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே, இந்த விபத்து குறித்தும் ஜான்வி ( Jaahnavi Kandula) மரணம் குறித்தும் அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் கேலி செய்து பேசிய தொலைபேசி உரையாடல் டேனியலின் பாடி கேமராவிலேயே பதிவாகி இருந்தது. ’இறந்த பெண் ஒரு சாதாரணமானவர்தான்.
பெரும் மதிப்பு மிக்கவர் அல்ல. அவருக்கு 11,000 டாலர் காசோலையே போதும்’ என விசாரணை அதிகாரி டேனியல் பேசுவது கேமராவில் பதிவாகி இருந்தது. ‘மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லவேண்டிய இடத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று ஜான்வி மீது கெவின் டேவ் மோதினார்.
ஆனால், கெவின் வேகமாகச் சென்றதால் அவர் கட்டுப்பாட்டை மீறியவராக மாட்டார்’ என விசாரணை அதிகாரி டேனியல் பேசியிருந்ததும் பதிவாகி இருந்தது. இதையடுத்து விசாரணை அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்க சியாட்டில் காவல்துறை உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஜான்வி கந்துல்லாவின் ( Jaahnavi Kandula) குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், வழக்கைத் தீர்ப்பதற்காக சியாட்டிலில் உள்ள அதிகாரிகள் 29 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.