நியூயோர்க் விபத்தில் இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
நியூயோர்க்கின் புகழ்பெற்ற சென்ட்ரல் பார்க் பகுதியில் குதிரை வண்டி விபத்துக்குள்ளானதில் இந்திய சுற்றுலாப் பயணியொருவர் உயிரிழந்துள்ளார். சென்ட்ரல் பார்க்கில் குதிரை மிரண்டு ஓடியதால், குதிரை பூட்டிய வண்டியிலிருந்து கீழே விழுந்த இந்தியாவைச் சேர்ந்த 18 வயது சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தார் .
நேற்று மதியம் ரோமஞ்ச் மகாஜன் மேலும் மூன்று பேருடன் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, குதிரை திடீரென மிரண்டு கட்டுப்பாட்டை இழந்து ஓடிய நிலையில் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்ட அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் இருந்து சுற்றுலாவுக்கு சென்ற 18 வயதுடைய ரோமஞ்ச் மகாஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன், விபத்துக்குள்ளான குதிரை பூங்காவில் வெறும் 6 வாரங்களாகத்தான் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஓட்டுநர் பயணிகளைப் புகைப்படம் எடுப்பதற்காக வண்டியை விட்டு சற்று தள்ளிச் சென்றபோது தான் குதிரை மிரண்டு ஓடியதாகக் குதிரை வண்டித் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சோகமான சம்பவத்தையடுத்து, குதிரை வண்டிகளைப் படிப்படியாக நிறுத்தவும், அதன் ஓட்டுநர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கவும் வழிவகை செய்யும் 'ரைடர்ஸ் சட்டத்தை' நகராட்சி சட்டமியற்றுபவர்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கன்சர்வேன்சி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.