அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தல் !
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் பணி தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார்.
டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும், சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்படும், பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது போன்றவற்றை வலியுறுத்தி டிரம்ப் பிரசாரம் செய்துவந்தார்.
205 இந்தியர்கள் நாடு கடத்தல்
இந்நிலையில் அதிபராக பொறுப்பேற்றதும், டிரம்ப் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக மெக்சிகோ எல்லையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் அவசர நிலையை பிரகடனப்படுதிய டிரம்ப், அங்கு சட்டவிரோதமாக குடியேறிய மக்களுக்கு எதிரான தணிக்கை மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்தவகையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் ராணுவ விமானம் இந்தியா புறப்பட்டுள்ளது. ஆனால் விமானம் எப்போது அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது.
எப்போது இந்தியா வந்து சேர்கிறது போன்ற தகவல்கள் ஏதும் இல்லை. இந்நிலையில் இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், சி-17 விமானம் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றுள்ளது எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட ராணுவ விமானத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 205 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.