முதலில் மருத்துவர்கள் அடுத்து குழந்தைகள்; கொரோனாவால் கதி கலங்கும் இந்தோனேசியா!
இந்தோனேஷியாவில் கொரோனா தொற்றுக்கு அதிக அளவு குழந்தைகள் உயிரிழந்து வரும் நிலையில் இது அந்த நாட்டு மக்களை நிலைகுலைய செய்துள்ளது.
உலககை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு இந்தோனேசியாவும் விதிவிலக்கல்ல. அங்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேசெல்கின்றது. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் பரவி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஆசியாவில் கொரோனாவின் மையப்பகுதியாக இந்தோனேசியா உருமாறி உள்ளது.
இந்தோனேசியாவை பொறுத்தவரை கிராமப்பகுதிகளே அங்கு அதிகமாக உள்ளதனால், போதுமான மருத்துவமனைகளோ, மருத்துவ கட்டமைப்புகளோ அங்கு அவ்வளவாக இல்லை. இதில் கொடுமை என்னவென்றால், டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் தொற்று ஏற்பட்டுவிடுவதால், அவர்களும் உயிரிழந்து வருகிறார்கள்.
இதுவரை அங்கு 545 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இந்த 2வது அலையால்தான், வைத்தியர்களின் உயிரிழப்புகள் அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது இந்தோனேசிய மக்களுக்கு பெருத்த கவலையை அளித்து வரும் நிலையில், கொரோனாவால் அங்குள்ள குழந்தைகளின் உயிரிழப்பானது, ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி கடந்த சில வாரங்களில் மட்டும் தொற்றுக்கு நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தனர். இவர்களில் பலர் 5 வயதுக்கும் உட்பட்டவர்கள் என கூறப்படும் அதேவேளை, கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுக்களும் பாதித்து வரும் நிலையில், பிறந்த குழந்தைகளும் உயிரிழந்துள்ளதால் மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இந்த இறப்பு வீதமானது மற்ற நாடுகளைவிட அதிகம் என்கிறார்கள். இந்தோனேஷியா முழுவதும் டெல்டா வகை தொற்று அதிகமானதுதான், குழந்தைகளின் உயிரிழப்புக்கும் காரணம் என்கிறார்கள்.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 50 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1,566 பேர் உயிரிழந்துவிட்டனர்..
மேலும் இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் , 12.5 சதவீதம் குழந்தைகள்தான் என்பதுதான் அடுத்த அதிர்ச்சி தகவல்.