பிரான்ஸில் மூன்றாவது பொது முடக்கமா? பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்கள்
கடந்த சில நாட்களில் பிரான்ஸ் முழுவதும் கொரோனா தொற்று நிலவரம் தீவிரமடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோன் கஸ்தெக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி அறிவிக்கப்படலாம் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் தெரிவித்தார்.
இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில் பாரிஸ் உட்பட புற நகரங்கள் அடங்கலாக நாடு முழுவதும் 20 மாவட்டங்கள் தீவிர தொற்று வலயங்களாக அடையாளம் காணப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இல்-து-பிரான்ஸின் பரிஸ், எசோன், ஓ – டி – சென், சென்-எ-மார்ன், சென்-செயிண்ட்-டெனி, வால்-டி-மார்ன், வால்-டி ஓயிஸ், இவ்லின் (Paris , Essonne , Hauts-de-Seine , Seine-et-Marne , Seine-Saint-Denis , Val-de-Marne , Val-d’Oise , Yvelines) மாவட்டங்கள் தொற்றுப் பிரதேசங்களில் உள்ளடங்குகின்றன.
இந்த மாவட்டங்களில் ஒரு இலட்சம் பேரில் 250 இற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்கள் நிலைமையை மதிப்பீடு செய்ய இருப்பதாகவும் அதன் பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். வார இறுதி நாட்களில் பொது முடக்கத்தை அமுல் செய்வது போன்ற தீவிரமான புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது பற்றிய முடிவு வரும் மார்ச் 6ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நீஸ் மற்றும் Dunkirk பகுதிகளில் ஏற்கனவே வார இறுதி நாள்களில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் கூறுகையில், 65 வயதுப் பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படும் என அறிவித்தார்.
அத்துடன் பிரான்ஸில் தினமும் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றுக்களில் 40% வீதத்துக்கும் அதிகமானவை ‘பிரித்தானிய வகை’ கொரோனா வைரசாகும்.
மேலும் நாட்டை முழுவதுமாக முடக்கும் முடிவைத் தவிர்ப்பது அல்லது இன்னும் தாமதிப்பது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை பிரதமரும் சுகாதார அமைச்சரும் தமது கருத்துக்களில் வெளிப்படுத்தி உள்ளனர்.