ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்திய பெங்களூர்
ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்பில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றியை பெற்றது.
துபாயில் இன்று இடம்பெற்ற 43- வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீர்ர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லீவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 22 பந்துகளில் ஜெய்ஸ்வால் 31 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் 19 ஓட்டங்களுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனைதொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தன் வீரர்கள் அனைவரும் பெங்களூரு அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 149 ஓட்டங்களை எடுத்தது.
இதன்பின்னர் 150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலங்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடங்க வீரர்களான கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திருந்த நிலையில் தேவ்தத் படிக்கல் 17 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பாரத் கோலியுடன் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்திகொண்டிருந்த நிலையில் கேப்டன் கோலி ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த மேக்ஸ்வெல், பாரத் உடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பொறுப்புடன் ஆடிய பாரத் 44 ஓட்டங்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 30 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இறுதி வரையில் இருந்தார். இறுதியில் 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை குவித்து பெங்களூர் அணி வெற்றிபெற்றது.