சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்த தல தோனி...முதல் அணியாக பிளே ஆப் சென்ற சென்னை
ஐதராபாத்தை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றை உறுதிப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஐபிஎல் தொடரின் 44-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதைத்தொடர்ந்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக சாஹா மற்றும் ஜேசன் ராய் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரர் விருத்திமான் சாஹா 44 ஓட்டங்களில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
சென்னை அணியில் ஹேசில்வுட் ,பிராவோ ஆகியோர் கூட்டாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனை தொடர்ந்து 135 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ் களமிறங்கினர்.
வழக்கம்போல அதிரடியாக ஆடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 75 ஓட்டங்களை சேர்ந்த நிலையில் கெய்க்வாட் 45 ஓட்டங்களில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி மற்றும் ரெய்னா ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
ஒரு கட்டத்தில் எளிதாக சென்னை அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை சற்று ஐதராபாத் அணி பக்கம் திருப்பினார் ஹோல்டர் . அடுத்ததாக ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த தோனி மிகவும் நிதானமாக ஆடினார்.
இதனால் ஆட்டத்தில் சற்று பரபரப்பு நிலவியது.
இறுதியாக தோனி வழக்கம் போல தனது பினிஷர் ஸ்டைலில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். இறுதியாக சென்னை அணி 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 139 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசிவரை களத்தில் தோனி 14*, அம்பதி ராயுடு 17* ஓட்டங்கள் எடுத்து இருந்தனர். புள்ளி பட்டியலில் சென்னை 18 புள்ளிகள் பெற்று முதலித்தில் உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி பிளே ஆப் சுற்றை உறுதி செய்த முதல் அணியாக திகழ்கிறது.