போராட்டத்தை அடக்க இணையம், தொலைபேசி சேவைகளை துண்டித்த ஈரான்!
ஈரான் போராட்டத்தை அடக்க நாடு முழுவதும் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகளை ஈரான் அரசாங்கம் துண்டித்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஈரானில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஈரானில் விலைவாசி அதிகரிப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் 12-வது நாளை எட்டியுள்ளது. முன்னாள் இளவரசர் ரெசா பஹ்லவி விடுத்த அழைப்பை ஏற்று, வியாழக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரிக்கை
தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் "சர்வாதிகாரமே ஒழிக" என முழக்கமிட்டனர். இந்த எழுச்சியை ஒடுக்க ஈரான் அரசு நாடு முழுவதும் இணையதள சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துள்ளது.
மேலும், விமான போக்குவரத்துகளும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட முன்னாள் இளவரசர் பஹ்லவி, மக்களின் குரலை நசுக்க ஈரான் அரசு தகவல் தொடர்புகளைத் துண்டித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
அதோடு , ஈரானிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அவர் நன்றி தெரிவித்ததுடன், ஐரோப்பிய நாடுகளும் ஈரான் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கிடையில், வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தலைமைக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அதிகாரிகள் போராட்டங்களுக்கு எதிரான தங்கள் எதிர்வினையை அதிகரித்து, போராட்டக்காரர்களைக் கொல்லத் தொடங்கினால் அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,260-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால், ஈரான் அரசு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் ட்ரோன்களைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கண்காணித்து வரும் நிலையில், ஈரானில் பதற்றம் அதிகரித்துள்ளது.