ஈரான் அழியப் போகிறது ; டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா உலகின் மிகவும் கொடிய ஆயுதங்களை தயாரிக்கிறது, அவற்றில் பல இஸ்ரேலிடம் இருக்கிறது. இஸ்ரேல் அதை ஈரான் மீது பயன்படுத்த தயங்காது. இதனால் ஈரான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல்கள் இன்னும் கடுமையானதாக இருக்கும்
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு உடனே ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இல்லையெனில், ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள தாக்குதல்கள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ட்ரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில்,
"ஈரானுக்கு பலமுறை வாய்ப்பு கொடுத்தும் அவர்கள் எங்களுடன் ஒப்பந்தம் செய்யவில்லை. இனி அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
ஏற்கனவே நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டன. இனியும் தாமதிக்காமல் இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அடுத்த தாக்குதல்கள் மிகக் கொடூரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் நாட்டில் இப்போது தீவிரவாதிகள் அனைவரும் இறந்துவிட்டார்கள். ஈரான் அழிந்து போவதற்கு முன்பு ஒரு ஒப்பந்தம் செய்து, எஞ்சியிருப்பதையாவது காப்பாற்ற வேண்டும். இதுவரை நடந்த தாக்குதல் இது மிகச் சிறப்பாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்.
நாங்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தோம், அவர்கள் அதை எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள். அவர்கள் கடுமையாக தாக்கப்படுவார்கள். இன்னும் நிறைய இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.