மலைக்கு அடியில் ஈரானின் ரகசிய அணு உலை; டிரம்ப் எச்சரிக்கையால் அச்சத்தில் உலகம்!
ஈரானின் நட்டாண்ஸ் அணுஉலை மையத்திற்கு அருகே அமைந்துள்ள ‘பிக்ஆக்ஸ் மலை’ (Pickaxe Mountain) என்ற மிகவும் சக்திவாய்ந்த நிலத்தடி அணுஆயுதத் தளத்தின் மீது அமெரிக்கப் படைகள் மிக விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும் என டிரம்ப் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தனது அணுஆயுதத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கிரானைட் பாறைகளுக்கு அடியில் 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் ‘பிக்ஆக்ஸ்’ நிலத்தடிப் சுரங்கப் பாதையை அமைத்து அதில் ஆயிரக்கணக்கான அதிநவீன சென்ட்ரிஃபியூஜ்களை மாற்றி அமைத்துள்ளதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமாகத் தாக்கி அழிக்கும்
மேலும், அங்குச் சந்தேகத்திற்கிடமான அணுசக்தி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை அமெரிக்கச் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஈரானைப் பற்றியும் பிக்ஆக்ஸ் மலையில் யார் யாருடைய நடமாட்டம் இருக்கிறது என்பதையும் நாங்கள் உளவு அமைப்புகள் மூலம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
ஈரான் எந்தவொரு சூழ்நிலையிலும் அணுஆயுதம் தயாரிப்பதை அனுமதிக்க முடியாது. அங்கே ஏதேனும் அணுசக்தி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டால், மிக விரைவில் பிக்ஆக்ஸ் தளத்தை அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமாகத் தாக்கி அழிக்கும்” என எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி அச்சுறுத்தலுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், உலகின் மிகவும் பலமாகப் பாதுகாக்கப்பட்ட அணுஆயுதத் தளமான பிக்ஆக்ஸ் மலை மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்தையும் போர்க் களமாக மாற்றிவிடும் என எச்சரித்துள்ளனர்.
இந் நிலையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடரும் இந்த மோதல் போக்கால் சர்வதேச அளவில் அணுஆயுதப் போர் அபாயம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.