தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல் ; அதிர்ச்சி அளிக்கும் ஈரான்
இஸ்ரேலுக்கு எதிரான போரில், தடை செய்யப்பட்ட கிளஸ்டர் ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 8வது நாளாக தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் இருநாடுகளிடையே தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதிநவீன ஆயுதங்களை போரில் பயன்படுத்தி வருகின்றன.
கிளஸ்டர் ஏவுகணை
அந்த வகையில், இந்தப் போரில் சர்ச்சைக்குள்ளான ஆயுதமான கிளஸ்டர் ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் தரப்பில் கூறியதாவது:
கிளஸ்டர் ஏவுகணை ஒருமுறை வெடித்து, அதில் இருந்து சிறிய வகை வெடிகுண்டுகள் பிரிந்து சென்று தாக்கும். அந்த வகையில், இஸ்ரேலின் அஷோர் நகரின் மீது கிளஸ்டர் ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 8 கி.மீ., தொலைவுக்கு இதன் பாதிப்பு இருந்தது. இதில், எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை, என தெரிவித்துள்ளது.
ஈரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலின் பாதுகாப்புக்கு சவால் இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எபி டெப்ரின் கூறுகையில், 'பயங்கரவாத நாடு (ஈரான்) பொது மக்களை குறிவைக்கிறது. கிளஸ்டர் ஆயுதங்களைக் கூட பயன்படுத்துகிறது,' எனக் குற்றம்சாட்டினார்.
கிளஸ்டர் ஏவுகணையை ஈரான் பயன்படுத்தியதற்கு, ஆயுதக் கட்டுப்பாட்டு சங்க குழுவின் நிர்வாக இயக்குனர் டேரில் கிம்பால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; கிளஸ்டர் ஏவுகணை போன்ற ஆயுதங்கள் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தினால், வெடிக்காத வெடிகுண்டுகளால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும், எனக் கூறினார். கடந்த 2008ம் ஆண்டு கிளஸ்டர் ஏவுகணைகளை பயன்படுத்த தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் 111 நாடுகள் கையெழுத்திட்ட நிலையில், ஈரான், இஸ்ரேல் அதனை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023ம் ஆண்டு ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா கொடுத்த கிளஸ்டர் ஏவுகணைகளை வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இதே ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவும் தாக்குதலை நடத்தியுள்ளது.