ஏலத்திற்கு வருகிறது ஐசக் நியூட்டனின் கை பிரதி
கணிதவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் எழுதிய கைப்பிரதிகள், லண்டனில் ஏலம் விடப்பட உள்ளன. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிறந்த ஐசக் நியூட்டன், 'எந்த வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு' என்ற அறிவியல் கோட்பாட்டை உலகிற்கு அறிவித்தவர்.
கணிதம், வானவியல், அறிவியல் துறைகளில் பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர், 1687ம் ஆண்டு வெளியிட்ட, 'இயற்கை தத்துவத்தின் கணிதவியல் கோட்பாடுகள்' என்ற நுால், புவியீர்ப்பு விசையின் அடிப்படை பரிமாணத்தை உலகிற்கு உணர்த்தியது.
இந்நிலையில், ஐசக் நியூட்டனின் ஒன்றரை பக்க கைப்பிரதியை, லண்டனைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம், அடுத்த மாதம் ஏலம்விட முடிவு செய்துள்ளது. இது குறித்து கிறிஸ்டி நிறுவனத்தின் புத்தக பிரிவு தலைவர் தாமஸ் வென்னிங் கூறியதாவது:கடந்த, 1690ல், ஐசக் நியூட்டன், தன் கணித வியல் கோட்பாடுகளை சீராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவரது நண்பரும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வான சாஸ்திர அறிஞருமான டேவிட் கிரிகோரி, கோட்பாடுகள் தொடர்பான சில கருத்துகளை தெரிவித்தார். இருவரும், ஒன்றரை பக்க காகிதத்தில், சில வரைபடங்களுடன், தங்கள் ஆய்வுகளை விளக்கியுள்ளனர்.
இந்த இரு மேதைகளின் அரிய கைப்பிரதி, அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. இது, 6 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.