உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் 79 பேர் பலி
காசா பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதல்களில் 79 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என அங்குள்ள சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் எனவும் கூறப்படுகிறது. இவை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் Gaza Humanitarian Foundation (GHF) வழங்கும் உதவித்திட்ட மையங்களுக்கு அருகே நடந்ததாகக் கூறப்படுகிறது.
சுகாதார அமைச்சகம் தகவல்
குறிப்பாக நெட்ஸாரிம் வழித்தடம் அருகிலுள்ள GHF முகாமை அணுக முற்பட்ட போதே குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய காசாவில் உள்ள அல்-அவ்தா மற்றும் அல்-அக்ஸா மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பலர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
"உணவிற்காக உயிரை பலியாக்கும் நிலைதான் இன்று காசாவில் நிலவுகிறது" என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகும் GHF உதவிக்கூடங்களை மக்கள் "மரணக்கூடங்கள்" எனப் பார்க்க ஆரம்பித்துவிட்டதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
GHF சனிக்கிழமையன்று மூடப்பட்டிருந்ததாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்த போதும், பஞ்சம் மற்றும் தடை காரணமாக, ஆயிரக்கணக்கானோர் உணவுக்காக அந்த இடங்களை நோக்கிச் சென்றுள்ளனர்.
இஸ்ரேலின் 15 வாரங்களுக்கு மேலான போர் நடவடிக்கைகள் காரணமாக காசா பகுதியில் மக்களின் நிலைமை மிகவும் மோசமாகியிருக்கிறது.
இந்நிலையில், GHF தொடங்கியதிலிருந்து இத்தகைய உதவிக்கூடங்களுக்கு அருகே மட்டும் 274 பேர் கொல்லப்பட்டு, 2,000 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.