காஸாவின் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ; ஒருவர் பலி
காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் போரில் தங்குமிடங்களை இழந்தும், படுகாயமடைந்தும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் முவாஸி பகுதியிலுள்ள குவைத்தி ஃபீல்ட் மருத்துவமனையில் தஞ்சமடைந்து வந்தனர்.
இந்நிலையில், இன்று அந்த மருத்துவமனையின் வடக்கு வாயிலின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கு பணிப்புரிந்து வந்த மருத்துவப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் பணிப்புரிந்த மருத்துவர்கள்.
குறிப்பாக இருவரின் உடல்நிலை அபாய நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இஸ்ரேல் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு காஸாவின் சுகாதார வழிகளை முற்றிலும் அழித்து வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 13-ம் திகதி வடக்கு காஸாவிலுள்ள மக்களை வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேல் ராணுவம் அப்பகுதியிலிருந்த மிகப் பெரிய பொது மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தி அதனை தகர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.