சிரியா துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்! சிரியா ராணுவம் தகவல்
சிரியாவில் உள்ள துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதாக சிரியா ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி இன்று அதிகாலை சிரியா நாட்டின் கடற்கரை நகரமான லதா கியாவில் உள்ள துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் பகுதியில் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் பல ஏவுகணைகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அப்பகுதி முழுவதும் தீப்பிடித்து நாசமானது என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.
மேலும் துறைமுகத்தில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், கொள்கலன்கள் பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிந்ததாகவும், அங்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றதாகவும், சிரியா அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து ராணுவ தரப்பில் கூறும்போது, லதாகியா துறைமுகத்தில் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அங்கு மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.