ஜப்பானில் 4 மாகாணங்களில் அவசரகால நிலை பிரகடனம்!
ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்புக்கான 4 ஆவது அலை வீசி வருவதனால் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய பெருநகர பகுதிகள் உள்பட 10 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga ) தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதன்போது பேசிய பிரதமர், வருகிற நாளை 25 ஆம் திகதி முதல் மே 11 ஆம் திகதி வரை 4 மாகாணங்களில் அவசரகால நிலைக்கான உத்தரவு பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ ஆகிய மாகாணங்களில் மக்களின் போக்குவரத்து குறையும் வகையில் குறைந்த கால அளவுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதாகவும் அவர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் சேவைகள் தவிர்த்து மற்ற செயல்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும், மிக பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி இல்லை என்பதுடன் மதுபான கூடங்களும் மூடப்படும் என்றும், அதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுள்ளது.
இதேவேளை ஜப்பான் மக்கள் தொகையில் இதுவரை 1 சதவீதம் பேருக்கே பைசர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மற்ற நாடுகளை விட தடுப்பூசி போடுவதில் அந்நாடு பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாக என கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது.