கனடாவில் துப்பாக்கி முனையில் நடந்த துணிகர சம்பவம்: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்
எட்மண்டனில் வணிக வளாகம் ஒன்றில் நகைகடையில் புகுந்து கொள்ளையிட்டு தப்பிய இருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
50 அவென்யூ மற்றும் 111வது தெருவில் நவம்பர் 9ம் திகதி குறித்த துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. மதியத்திற்கு மேல் சுமார் 3 மணியளவில் தொடர்புடைய நகைகடையில் புகுந்த இருவர், திடீரென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி, நகைகளை பறித்துள்ளனர்.
இதனையடுத்து இருவரும் அந்த கடையில் இருந்து மாயமாகியுள்ளனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு 100,000 டொலருக்கும் அதிகமிருக்கலாம் என கூறப்படுகிறது.
கொள்ளையில் ஈடுபட்ட இருவரும் சிவப்பு வண்ண Honda Civic காரில் தப்பியதாக தெரிய வந்துள்ளது. குறித்த கார் கடைசியாக மேற்கு நோக்கி பயணித்தது என பொலிஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற வாகனமானது திருடப்பட்டது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
கொள்ளையிட்டு தப்பிய இருவரும் வெள்ளையர்கள் எனவும், கருப்பு உடைகள் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கொள்ளையர்களுக்கு சாரதியாக செயல்பட்ட நபர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றே பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.