ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி தொடர்பில் கனடா அரசு வெளியிட்டுள்ள தகவல்
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை தொடர்வதா இல்லையா என்ற கேள்வி எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய ஆலோசனை கமிட்டி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் போலவே, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசியும் அபூர்வமாக இரத்தக்கட்டிகளை உருவாக்குவதாக தெரியவந்த நிலையில், அதை பயன்படுத்துவதா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது.
ஆகவே, அது தொடர்பில் தேசிய ஆலோசனை கமிட்டியின் துணைத் தலைவரான Dr. Shelley Deeks ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
அதாவது, ஒருவரால் இந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளை எந்த அளவுக்கு தாங்கி கொள்ளமுடியும் என்பதையும், மொடெர்னா மற்றும் பைசர் நிறுவன தடுப்பூசிக்காக காத்திருக்கும் நேரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதா என்பதையும் பொருத்து, மக்கள் எந்த தடுப்பூசியை பெறுவது என்பதை தாங்களே முடிவு செய்துகொள்ளட்டும் என்கிறார் Dr. Shelley.
ஒருவர் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பவர் என்றால், அவருக்கும், அலுவலகம் செல்பவர்களுக்கும் உள்ள கொரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயத்தின் அளவு வேறுபடுகிறது.
ஆக, அப்படிப்பட்டவர்கள் மொடெர்னா போன்ற தடுப்பூசிக்காக காத்திருக்க இயலும். ஆனால், தன்னைப் பொருத்தவரை, இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருப்பதை கடினமாக நினைப்பவர்கள், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை விரும்பலாம் என்பதால் மாகாணங்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கே முக்கியத்துவம் கொடுக்கும் என தான் கருதுவதாக தெரிவிக்கிறார் அவர்.
கர்ப்பிணிகள் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை தடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு இரத்தக் கட்டிகள் உருவானால் சிகிச்சை அளிப்பது கடினம் என்பதால் இந்த ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் போதுமான அளவுக்கு பைசர் மற்றும் மொடெர்னா நிறுவன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன, என்றாலும், தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவதற்காக ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன் தடுப்பூசிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆக, 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம், கர்ப்பிணிகள் அதை போட்டுக்கொள்ளவேண்டாம், காத்திருக்கும் வாய்ப்புள்ளவர்கள் மொடெர்னா முதலான தடுப்பூசிகளுக்காக காத்திருக்கலாம் என பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு குழப்பம்தான் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
அவருக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சரான Patty Hajdu, மக்களுக்கு என்ன முடிவு செய்வதென தெரியவில்லை என்றால், அவர்கள் தங்கள் மருத்துவரை அணுகி, தாங்கள் என்ன தடுப்பூசி போடுவது என்பது தொடர்பாக ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் என்கிறார்.