ஆப்கானிஸ்தான் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்த ஜோ பைடன்
காபூலில் இருந்து மக்களை வெளியேற்றுவது வரலாற்றில் மிகவும் கடினமான மீட்பு பணி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் தலீபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபுல் உள்பட பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை தலீபான்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் விமானத்தில் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்து ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வெளிநாடுகளில் வாழும் ஆப்கான் மக்கள் தாங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களையும், தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. தலீபான்களின் ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என ஜப்பான் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மீட்புப் பணி தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், காபுலில் இருந்து மக்களின் வெளியேற்றத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் வரலாற்றில் இது மிகவும் கடினமான விமானம் வழியான மீட்புப் பணி என்றும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களை வெளியேற்றும் பணி, முன் எப்போது இல்லாத வகையில் கடினமாக இருப்பதாகவும், களத்தில் போராடும் அமெரிக்க ராணுவத்தினரின் முடிவை யூகிக்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் ஆப்கானிஸ்தான் தலீபான்கள் பிடியில் சிக்கி முழுமையாக ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அங்கிருந்து 13,000 பேரை அமெரிக்க ராணுவ விமானங்கள் மீட்டுள்ளது என்று தெரிவித்த அவர் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஒரே ஒரு அமெரிக்கரைக்கூட விட்டுவைக்காமல் மீட்போம் என்று உறுதியளித்துள்ளார்.