ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி; அமெரிக்கா ஒப்புதல்
அவசர கால பயன்பாட்டுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியின் அமெரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் உள்பட தற்போது பயன்பாட்டில் இருக்கிற தடுப்பூசிகள் அனைத்தும் இரட்டை டோஸ் தடுப்பூசிகளாகவே உள்ளன.
முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அத்துடன் 2 டோஸ் தடுப்பூசி போட்டு சிறிது காலத்துக்கு பின்னர்தான் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக ஒற்றை டோஸ் தடுப்பூசியை உருவாக்கி உள்னனர். இதன் மருத்துவ பரிசோதனையில், கொரோனாவுக்கு எதிராக இது மிகவும் பயனுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்க உணவுமற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ. அறிவித்துள்ளது. ஏற்கனவே அங்கு பைசர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இவ்விரு தடுப்பூசிகளை விட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி விலை குறைவானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கடுமையான நோயை தடுப்பதில் இந்த தடுப்பூசி 85 சதவீதத்துக்கும் மேலாக பலன் அளிக்கும் என தரவுகள் கூறுகின்றன.
ஆனால் ஒட்டுமொத்தமாக 66 சதவீதம் பலன் அளிக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளது. இதுதொடர்பாக உணவு மற்றும் மருந்து நிர்வாக இயக்குனர் ஜேனட் வூட்காக் பேசுகையில், இந்த தடுப்பூசியின் அங்கீகாரம் இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் எங்களுக்கு உதவ, கொரோனாவின் சிறந்த மருத்துவ தடுப்பு முறையான தடுப்பூசிகளின் கிடைப்பை விரிவுபடுத்துகிறது” என கூறினார்.
இதேவேளை முன்னதாக வரும் மார்ச் மாத இறுதிக்குள் 2 கோடி டோஸ் தடுப்பூசிகளை வினியோகிக்க முடியும் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.