பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிலிருந்து திடீரென விலகிய கமல்: அவரே வெளியிட்ட தகவல்
விஜய் டிவியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் 5 சீசன்களை வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.
பிக்பாஸ் சீசன்களை முடித்துவிட்டு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளில் தீவிர முயற்சியில் இருந்தார். இத்துடன் விக்ரம் படத்திலும் நடித்து வந்தார் கமல்.
இந்த நிலையில் தற்போது ஓடிடி.,யில் மட்டுமே ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார்.
இதனால் அவருக்கு இருக்கும் பொறுப்புகளினால் தொடர்ச்சியாக தொகுத்து வழங்க முடியாது என தெரிவித்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.
இது தொடர்பாக அவர், இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் ஓடிடியில் டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது, அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்தது.
ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு.
— Kamal Haasan (@ikamalhaasan) February 20, 2022
After a short break. pic.twitter.com/NfbUMz1GjY
புதிய புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும், மக்களை மகிழ்விக்கக் கிடைக்கும் எந்தச் சிறிய வாய்ப்பையும் தவறவிடக்கூடாது எனும் என் உத்வேகத்திற்குப் பிக்பாஸ் அல்டிமேட் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.
இவர்களோடு இணைந்து புதுமைப் பாதையில் பயணிப்பதில் எனக்கு அளவற்ற பெருமிதம் உண்டு. லாக்டவுன் விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் விளைவாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த திகதிகளும், விக்ரம் படப்படிப்பு திகதிகளிலும் மாற்றங்கள் செய்யவேண்டியதாகிவிட்டது.
இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய திகதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால், பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது.
இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களையும் கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுனர்களையும் என் சொந்தக் காரணங்களின் பொருட்டு தாமதிக்கச் செய்வது நியாயமல்ல.
அவர்கள் ஒப்புக்கொண்ட பணிகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன. ஆகவே வேறு வழியின்றி கனத்த மனதுடன், இன்றைய எபிஸோடுக்குப் பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான நாள்தொட்டு அதன் அங்கமாக இருந்து ரசிகர்களைச் சந்தித்து உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
என்னுடைய விலகல் ஏற்படுத்தும் சிரமங்களுக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மிகச் சிறிய, தற்காலிக இடைவெளிதான். மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 6-ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.