புயலால் சேதமடைந்த வீடு: காப்புறுதி நிறுவனத்துடன் போராடும் தம்பதி!
கனடாவின் கிச்சனர் பகுதியில் வீசிய பலத்த புயலில் மரமொன்று முறிந்து வீட்டின் கூரை மீது விழுந்ததில் சேதமடைந்த வீடொன்றின் உரிமையாளர்கள், தங்களது காப்புறுதி நிறுவனத்துடன் இழப்பீடு தொடர்பாகப் போராடி வருகின்றனர்.
டக் மற்றும் அலிசியா ஆர்னால்ட் என்ற தம்பதியரின் வீட்டின் மீது, அவர்களது தோட்டத்தில் இருந்த மரம் பாதியாகப் பிளந்து கூரையின் மீது விழுந்துள்ளது.
25 ஆண்டுகளாகத் தவறாமல் காப்புறுதிக் கட்டணம் செலுத்தி வரும் தங்களுக்கு, முழுமையான இழப்பீடு வழங்க காப்புறுதி நிறுவனம் மறுப்பதாக அலிசியா வேதனை தெரிவித்துள்ளார்.

கூரை மீது விழுந்த மரத்தின் பகுதியை அகற்றுவதற்கும் கூரையைச் சீரமைப்பதற்கும் மட்டுமே காப்புறுதி நிறுவனம் நிதியளிக்க முன்வந்துள்ளது.
ஆனால், ஆபத்தான நிலையில் எஞ்சியுள்ள மரத்தின் மறுபகுதியை அகற்றுவதற்கு இழப்பீடு வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எஞ்சிய பகுதியைத் தங்களது சொந்தச் செலவிலேயே அகற்ற வேண்டிய நிலைக்குத் தம்பதியினர் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கனடா காப்புறுதிப் பணியகத்தின் துணைத் தலைவர் அமண்டா டீன், பெரும்பாலான வீடமைப்பு காப்புறுதிக் கொள்கைகள் கட்டிடக் கட்டமைப்புக்கும் அதனால் ஏற்படும் நேரடிச் சேதங்களுக்குமே முன்னுரிமை அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான சிக்கலான சூழல்களில் காப்புறுதி ஒப்பந்தங்களின் விவரங்களைச் சரியாகப் பரிசீலிக்குமாறும், காப்புறுதி மதிப்பீட்டாளர்களிடம் தெளிவான விளக்கங்களைக் கோருமாறும் அவர் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.