தினமும் 50 வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நாடு: வெளியான காரணம்
கடந்த 2021ல் மட்டும் 18,221 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் குவைத் உள்விவகார அமைச்சகம் தெரிவிக்கையில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 பேர்கள் என ஒவ்வொரு மாதத்திலும் 1,518 பேர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 11,177 ஆண்கள் மற்றும் 7,044 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். காலாவதியான இருப்பிட சான்றிதழ்களை உபயோகித்து சட்டவிரோதமாக வசிப்பவர்களே பெரும்பாலும் நாடு கடத்தப்படும் பட்டியலில் சிக்கியுள்ளனர்.
மட்டுமின்றி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், தற்கொலைக்கு முயன்றோர், ஊரடங்கு விதிகளை மீறியோரும் கடந்த ஆண்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஆர்பாட்டங்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள், நாட்டின் பொதுநலன் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் நடத்தை கொண்டவர்களாக கருதப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.