உக்ரைன் தலைநகருக்கு சென்ற 4 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்
உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியிலும் போலந்தில் இருந்து நேற்றையதினம் (16-06-2022) ரயில் மூலமாக உக்ரைன் தலைநகர் கீவுக்கு ஐரோப்பியாவின் முக்கிய தலைவர்கள் சென்றடைந்துள்ளனர்.
இதன்படி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ( (Emmanuel Macron), ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz,) இத்தாலி பிரதமர் மரியோ டிராகி (Mario Draghi) ஆகியோரே சென்றடைந்தனர்.
மேலும் அவர்களுடன் ருமேனியா அதிபர் கிளாஸ் ரோஹனீசும் சேர்ந்து கொண்டார். அவர்கள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அவர்கள் உக்ரைனுக்கும், அந்த நாட்டின் மக்களுக்கும் உதவ முன்வந்துள்ளனர். போரின் தொடக்கத்தில் ரஷியாவினால் கைப்பற்றப்பட்ட இர்பின் நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
அங்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் நிருபர்களிடம் பேசும்போது,
“இங்கு ரஷ்ய துருப்புக்களின் இனப்படுகொலைகளைத் தொடர்ந்து போர்க்குற்றங்கள் நடந்திருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.
இந்த நகரத்தை பேரழிவுக்கு வழிநடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
தலைநகரை தாக்குவதில் இருந்து ரஷ்ய துருப்புக்களை தடுத்து நிறுத்திய இர்பின், கீவ் மக்களின் தைரியம் பாராட்டுக்குரியது” என தெரிவித்தார்.
“சுதந்திரத்துக்காக போராடுகிற உக்ரைனுக்கு தேவைப்படும் வரையில் உதவிகள் செய்யப்படும்” என்று ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் உறுதி அளித்தார்.