பூர்வக்குடி மாணவர்கள் கல்லறைகளில் 751 விளக்குகளை ஒளிரவிட்ட மக்கள்
கனடாவில் மேரிவல் இந்திய உண்டுறை பள்ளி வளாகத்தில் அடையாளப்படுத்தப்படாத கல்லறை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக சனிக்கிழமை அஞ்சலி கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மொத்தம் 751 விளக்குகள் ஒளிரவிடப்பட்டு, பூர்வக்குடி மாணவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சனிக்கிழமை சுமார் 7.30 மணியளவில் இந்த அஞ்சலி கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய சடங்கு மற்றும் பிரார்த்தனைகளுடன் இந்த அஞ்சலி கூட்டமானது முன்னெடுக்கப்பட்டது. மெளன அஞ்சலிக்கு பிறகு மாணவர்களின் நினைவாக கொடி வைக்கப்பட்டிருந்த இடத்தில் 751 விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டன.
வயது வித்தியாசம் இன்றி பெரும்பாலான மக்கள் இந்த அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னாள் உண்டுறை பள்ளி வளாகங்களில் இன்னும் தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்படும் என நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் கம்லூப்ஸில் உள்ள ஒரு முன்னாள் உண்டுறை பள்ளியின் வளாகத்தில் 215 பூர்வக்குடி மாணவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
மேரிவல் இந்திய உண்டுறை பள்ளி வளாகத்தில் இருந்து 751 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இந்த விவகாரத்தில் தொடர் நடவடிக்கைகளுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.