தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் லண்டன் தாயார்!
லண்டனில் மூன்று பிள்ளைகளின் தாயான பெண்மணி ஒருவர் நகைகள் செய்வதற்கு தாய்ப்பாலைப் பயன்படுத்துகிறார்.
லண்டனைச் சேர்ந்த சஃபியா ரியாத் (Safia Riyadh)மற்றும் அவரது கணவர் ஆடம் ரியாத்(Adam Riyadh) ஆகியோர் மெஜந்தா ஃப்ளவர்ஸ் (Magenta Flowers) என்ற விருது பெற்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வாழ்வில் நிகழும் மிகவும் முக்கியமான தருணங்களில் பயன்படுத்தப்படும் மலர்களை விலைமதிப்பற்ற நினைவு பரிசுகளாக மாற்றித்தரும் இந்த நிறுவனம் 2019-ல் தொடங்கபட்டுள்ளது.
இதுவரை சுமார் 4,000 ஆர்டர்களை வழங்கியுள்ளது. இந்நிறுவனம் இப்போது தாய்ப்பாலில் இருந்து விலையுயர்ந்த கற்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளது. மூன்று பிள்ளைகளுக்கு தாயான சஃபியா, தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார்.
மேலும் அதுபற்றிய நினைவுகளை தாய்மார்கள் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தைப் புரிந்து கொண்டுள்ளார்.
இது தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையே ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை வழங்குவதாகவும், அந்த நேசத்துக்குரிய பிணைப்பைக் கொண்டாடுவதாகவும் சாஃபியா(Safia Riyadh) தெரிவித்துள்ளார்.
இதனை உலகம் முழுவதும் உள்ள தாய்மார்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை விட விலைமதிப்பற்றதாக கருதுகின்றனர். தாய்ப்பாலில் இருந்து நகைகள் தயாரிக்கும் வழக்கம் பல மேற்கத்திய நாடுகளிலும் உண்டு.
கொரோனா லாக்டவுன் காலத்தின் போது, சஃபியா(Safia Riyadh) படித்த கட்டுரை ஒன்று அவரை தனது தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உந்தியுள்ளது.
ஆம், அவர் படித்த கட்டுரையில் தாய்ப்பால் மூலம் நகைகள் செய்யப்படுவதை அறிந்து ஆச்சர்யம் அடைந்தார், அது பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்ட சஃபியா (Safia Riyadh) தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
தாய் பால் எளிதில் கெட்டுப்போகக்கூடியது. அதனை நீண்ட நாட்களுக்கு நிறம் மாறாமல் பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான காரியம். இதற்காக சஃபியா(Safia Riyadh) பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தீர்வு கண்டுபிடித்துள்ளார்.
முதலில் தாய்பாலில் உள்ள திரவத்தை நீக்கிவிட்டு, அதனுடன் நிறமற்ற பிசினைக் கலந்து நகைகளை உருவாக்குகிறார். இதனால் தாய் பால் நிறம் மாறாமல் நிலைத்து நிற்க முடியும் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.
தற்போது தாய் பால் மூலம் நகைகள் தயாரிக்கும் புதிய தொழிலில் கால் பதித்துள்ள அந்நிறுவனம், 2023ம் ஆண்டுக்குள் 1.5 மில்லியன் டொலர்கள் வரை வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. தாய்ப்பால் நகைகளில் நெக்லஸ்கள், காதணிகள் மற்றும் மோதிரங்கள் செய்யப்படுகிறது.

