மலை நிறைய தங்க கட்டிகள்; அள்ளிச்செல்லும் மக்கள்; வைரல் காணொளி
காங்கோ நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள மலையில் தங்கப்படிவுகள் கிடைத்துள்ள நிலையில் , அப்பகுதி மக்கள் அந்த மலையை குடையும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காங்கோ நாட்டின் தெற்கு கிவு மாகாணப்பகுதியில் உள்ள லுஹிஹி மலைப்பகுதியில் தங்கம் நிறைந்த மண் இருப்பதாக வந்த தகவலையடுத்து, அப்பகுதி மக்கள், அந்த மலையில் இருந்து மண்ணை தோண்டி வருகின்றனர்.
இந் நிகழ்வு குறித்த இரண்டு வீடியோக்களை, ப்ரீலான்ஸ் பத்திரிகையாளரான அகமது அல்கோபாரி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த மலையில் உள்ள மண்ணை மண்வெட்டி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் தோண்டி எடுக்கின்றனர். பலர் தங்கள் கைகளாலேயே தோண்டி எடுப்பதாக ஒரு வீடியோவும், தோண்டி எடுக்கப்பட்ட மணலை, தண்ணீர் கொண்டு கழுவி அதை வடிகட்டி, அதில் இருந்து தங்கம் தனிமத்தை தனியாக பிரித்து எடுப்பது போன்று மற்றொரு வீடியோவும் இடம்பெற்றுள்ளது.
மக்கள் அதிகளவில், அந்த மலைப்பகுதியில் குவிந்து வரும் நிலையில், அப்பகுதியில் மணல் தோண்டல் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த தென் கிவு மாகாணத்தின் சுரங்கத்துறை அமைச்சர் வெனன்ட் குருமி முஹிகிர்வா உத்தரவிட்டு உள்ளார்.
இதேவேளை காங்கோ நாட்டில் கிடைக்கும் தங்கப்படிவுகளை அதன் அண்டை நாடுகளில் உள்ளவர்கள், சட்டவிரோதமாக கடத்தி அந்நாட்டிற்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.