குடும்பத்தை பிரிந்து கனடா சென்ற இளைஞர் சந்தித்த விபத்து... தாய் கண்ணீர் கோரிக்கை
இந்தியாவிலிருந்து குடும்பத்தைப் பிரிந்து கல்வி கற்பதற்காக கனடா சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராத வகையில் விபத்து ஒன்றில் சிக்கினார்.
லூதியானாவைச் சேர்ந்த விநாயக் ஜோஷி (19), 2019ஆம் ஆண்டு கனடாவுக்கு சென்று ரொரன்றோவில் பொறியியல் டிப்ளமோ முடித்துவிட்டு பகுதி நேரப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்திருக்கிறார். அப்போது அதிவேகத்தில் சாலையில் பயணித்த ஒரு கார் ஜோஷி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில், ஜோஷியின் கால்கள், கணுக்கால்கள், முழங்கால்கள், தொடைகள் மற்றும் தோள்களில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதிக இரத்தம் வெளியேறி சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஜோஷி. இரண்டு வாரங்களாக உதவிக்கு யாருமின்றி ஜோஷி மருத்துவமனையில் தனிமையில் இருக்கும் நிலையில், ஜோஷியை சென்று கவனித்துக்கொள்வதற்காக தனக்கு விசா மற்றும் தேவையான ஆவணங்கள் அளித்து உதவுமாறு ஜோஷியின் தாயாகிய பூனம் ஜோஷி, இந்திய மற்றும் கனடா அரசுகளை கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.